தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மருத்துவர் கபீல் கானை விடுதலை செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60 குழந்தைகள் இறந்தபோது, குழந்தைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்து பல உயிர்களைக் காப்பாற்றியவர் என கூறப்பட்டவர் டாக்டர் கஃபீல் கான்.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டாக்டர். கபீல் கான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரா சிறையில் அடைக்கப்பட்டார். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கபீல்கானைக் கைது செய்யப்பட்டக் காலம் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில் மேலும் 3 மாதம் காலம் நீட்டிக்கப்பட்டது. இதனால் கபீல்கான் கைதை எதிர்த்து கபீல்கான் குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் அனுப்பியது.
வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்ட டாக்டர் கபீல் கானை விடுவிப்பதற்கான மனுவின் மீது பதினைந்து நாட்களுக்குள் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் டாக்டர் கபீல்கானை தடுப்புக்காவலில் வைத்திருப்பது சட்டவிரோதம் என விமர்சித்ததுடன் அவர் பேச்சில் அலிகார் நகரத்தின் அமைதி மற்றும் அமைதியை எங்கும் அச்சுறுத்தவில்லை எனக் குறிப்பிட்டுஅவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது.
கடந்த காலங்களில் உத்தரப்பிரதேச அரசு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக டாக்டர் கபீல்கானை கைது செய்து சிறையிலடைத்தது. எனினும் அந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என நிரூபணமாகி அவர் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.