கேரளத்தைச் சேர்ந்த மடாதிபதி கேசவானந்த பாரதி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அடிப்படை உரிமைகள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பின் மனுதாரரும், கேரள எட்னீர் மடத்தின் தலைமை மடாதிபதியுமான கேசவானந்த பாரதி இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
சுவாசக்கோளாறு மற்றும் இதயக்கோளாறு காரணமாக மங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 80.
தொடர்ந்து இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'சமுதாய சேவைக்காகவும், நலிந்தவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் கேசவானந்த பாரதி ஜி அவர்களின் பங்களிப்புகளை நாம் எப்போதும் நினைவில்கொள்வோம். அவர் இந்தியாவின் வளமான கலாசாரம் மற்றும் அரசியலமைப்புடன் ஆழமாக இணைந்திருந்தார். அவர் அடுத்த தலைமுறையினருக்கும் ஊக்கமளிப்பார். ஓம் சாந்தி' என்று பதிவிட்டுள்ளார்.