புது தில்லி: கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தி, அதனை தடுப்பதில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பாஜகவின் 40-வது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, கரோனாவின் தீவிரத்தை உணர்ந்துள்ள இந்தியா அதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. கரோனா தடுப்பில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் ஒற்றுமையை நேற்று இரவு 9 மணிக்கு அனைவருமே பார்த்தோம். இது ஒரு நீண்ட போராக இருக்கலாம். ஆனால் அதற்காக நாம் சோர்ந்து விடக் கூடாது. கரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் வெல்வதே நமது இலக்காக இருக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை மக்கள் இவ்வளவு தீவிரமாகக் கடைப்பிடிப்பார்கள் என்று ஒருவருமே கற்பனை கூட செய்து பார்திருக்க மாட்டார்கள் என்றும் மோடி தெரிவித்தார்.