பான்டா: உத்தரப்பிரதேச மாநிலம் ஜமால்புர் கிராமத்தைச் சேர்ந்த 35 வயது நபர், இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதால் கரோனா அச்சம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காய்ச்சல் மற்றும் இருமல் தான் கரோனாவுக்கு அறிகுறி என்பதால், தனக்கு கரோனா வந்து விடுமோ என்ற அச்சத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக காவல்துறை சந்தேகிக்கிறது.
காய்ச்சல் மற்றும் இருமல் வந்ததால், அவரை கிராமத்தினர் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும், இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட நபர், சிகிச்சைக்காக எந்த அரசு மருத்துவமனையையும் நாடவில்லை என்றும் மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
தில்லியில் பணியாற்றி வந்த ராஜேந்திரா, மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஊருக்குத் திரும்பிய நிலையில், தொடர்ந்து அவருக்கு இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதாக கிராம மக்கள் கூறுகிறார்கள்.