புது தில்லி: என்95 ரக முகக்கவசங்களை கிருமி நாசினியைக் கொண்டு சுத்தப்படுத்திவிட்டு, மீண்டும் பயன்படுத்தலாம் என்று மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்கு தில்லி எய்ம்ஸ் அறிவுறுத்தியுள்ளது.
முகக்கவசங்களைப் பற்றி நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில், 95 ரக முகக்கவசங்களை கிருமி நாசினிக் கொண்டு சுத்தப்படுத்தி, தனி ஒருவர் ஒரு முகக்கவசத்தை தொடர்ந்து 4 முறை பயன்படுத்தலாம், இதையே 20 நாட்களுக்கு பின்பற்றுமாறு எய்ம்ஸ் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், நோயாளிகளை நேரடியாக எதிர்கொள்ளும் அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும் என்95 ரக முகக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், உறைவிட செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் இதரப் பணியாளர்களும் இதில் அடங்குவர்.
ஒவ்வொரு மருத்துவப் பணியாளருக்கும் தலா 5 என்95 ரக முகக்கவசம் வழங்கப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.