இந்தியாவில் 6 பேருக்கு உருமாறிய அதிதீவிர கரோனா பாதிப்பு உறுதி
புது தில்லி: பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய அதிதீவிர கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த 3 பேர், ஹைதராபாத்தைச் சேர்ந்த 2 பேர், புனேவைச் சேர்ந்த ஒருவருக்கு அதிதீவிர கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உருமாறிய அதிதீவிர கரோனா உறுதி செய்யப்பட்ட ஆறு பேரும் தனித்தனி அறைகளில் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்கலாமே.. தமிழகத்தில் 6 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று?
அதிதீவிர கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட ஆறு பேருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரிட்டனில் தன்னைத்தானே தகவமைத்துக் கொண்ட அதிதீவிர கரோனா கண்டறியப்பட்டதையடுத்து, பிரிட்டனிலிருந்து நவம்பர் 25-ம் தேதி முதல் டிசம்பர் 23 வரை இந்தியா திரும்பிய 33 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 114 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 6 பேருக்கு அதிதீவிர கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புவரை கடுமையாக பரவி வந்த நோய்த்தொற்று, அண்மைக் காலமாக கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இது அச்சத்தில் உறைந்திருந்த மக்களுக்கு சற்று ஆறுதலையும், நம்பிக்கையையும் அளித்திருந்தது.
ஆனால், அதனைத் தகா்க்கும் வகையில் பிரிட்டனில் புதிய வகை கரோனா தீநுண்மிகள் கண்டறியப்பட்டதுடன், அதனால் ஏராளமானோா் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது உள்ள கரோனா தொற்றைக் காட்டிலும் 70 சதவீதம் வேகமாக பரவக் கூடிய ஆற்றல் வாய்ந்ததாக அந்த தீநுண்மி உருவெடுத்துள்ளது.