இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,987 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 2.66 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகளவில் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 6 வது இடத்தில் உள்ளது. குறிப்பாக நாட்டிலேயே அதிக பாதிப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு, தில்லி ஆகியவை உள்ளன.
இதனால் நாடுமுழுவதும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டதோடு மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிகையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9,987 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இத்துடன் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,56,611-லிருந்து 2,66,598-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 331 பேர் பலியான நிலையில் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கையானது 7,466-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,24,095-லிருந்து 1,29,215-ஆக உயர்ந்துள்ளது.