பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது தாய் மாதவி ராஜேவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி சிந்தியா குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் மருத்துவமனை வட்டாரங்கள் மூலம் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு கிடைத்த தகவல்கள்:
"ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது தாய் மாதவி ராஜேவுக்கு தொண்டை வலி மற்றும் லேசான காய்ச்சல் இருந்ததன் காரணத்தினால், இருவருமே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இரண்டுமே கரோனா தொற்றுக்கான அறிகுறி.
அவர்களுக்கு திங்கள்கிழமை இரவு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் செவ்வாய்கிழமை வெளியான நிலையில், அவர்கள் இருவருக்குமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், மாதவி ராஜேவுக்கு அறிகுறிகள் இல்லை, சிந்தியாவுக்கு லேசான அறிகுறிகள் உள்ளன."
எனினும், இருவரது உடல்நிலை குறித்து சிந்தியா மற்றும் மருத்துவமனை தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கும் கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளன. இதையடுத்து, இன்று அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. தமிழகத்தில் திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.