புது தில்லி: தற்சார்பு இந்தியாவுக்கான திருப்பு முனையாக கரோனா போராட்டத்தையே நமக்கான நல்வாய்ப்பாக மாற்றுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்திய தொழில் சபையின் 95வது ஆண்டு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, இந்திய தொழில் சபை ஏற்படுத்திய பல்வேறு வாய்ப்புகளால் நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறையில். இது மிகப்பெரிய வரலாறு ஆகும்.
இந்தியா கரோனா தொற்றுடன் போராடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், வெள்ளம், வெட்டுக்கிளி தாக்குதல், நிலநடுக்கம் போன்ற பேரிடர்களையும் எதிர்கொண்டு வருகிறது.
கரோனா தொற்றுப் பரவலால் நாட்டுக்கு ஏற்பட்ட பேரிடரை, தற்சார்பு இந்தியா திட்டத்துக்கான நல்வாய்ப்பாக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை நாட்டுக்குள்ளேயே உற்பத்தி செய்வது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.