புது தில்லி: தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் திடீர் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு கடும் காய்ச்சல் மற்றும் ஆக்ஸிஜன் அளவுக் குறைந்ததால், தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த தகவலை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தனது சுட்டுரைப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
ஏற்கனவே காய்ச்சல் பாதித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது சுகாதாரத் துறை அமைச்சர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று நாள்களாக தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டிய நிலையில், திங்கள்கிழமை 1,647ஆக குறைவாக பதிவானது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 42,829ஆக அதிகரித்தது. திங்கள்கிழமை 73 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,400ஆக அதிகரித்ததாக தில்லி சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.
ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக பாதிப்பு எண்ணிக்கை 2,224ஆக இருந்தது.