கரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் காரணமாக தில்லியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளை மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், தில்லியில் கரோனா வைரஸ் ஒரு பெருந்தொற்று நோய் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.
தில்லியில் உள்ள தேர்வு நடைபெறாத பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தையும் மூடவும், அனைத்துத் திரையரங்குகளையும் மார்ச் 31ம் தேதி வரை மூடவும் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஆளுநர் அனில் பைஜால் ஆகியோர் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்துக்குப் பிறகு இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அதே சமயம், அனைத்துப் பொதுவிடங்களையும் தூய்மைப்படுத்தும் பணிகளையும் துரிதப்படுத்தவும் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் வியாழக்கிழமை நிலவரப்படி 73 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தில்லி அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.