

கலபுர்கி: கர்நாடக மாநிலம் கலபுர்கியில் கரோனா பாதித்தவர் உயிரிழந்த நிலையில், அவருடன் நேரடித் தொடர்பில்இருந்த 46 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஹைதாராபாதில் செவ்வாய்க்கிழமை இரவு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த கர்நாடக மாநிலம், கலபுர்கியைச் சேர்ந்த 76 வயதான முதியவர் கரோனா வைரஸால் தாக்கப்பட்டு, உயிரிழந்ததாக கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலு நேற்று தெரிவித்தார்.
இந்த நிலையில், கரோனா பாதித்து உயிரிழந்தவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 31 பேருக்கு, கரோனா பரவ அதிக வாய்ப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதே போல, மேலும் 15 பேர் கரோனா பரவ குறைந்த வாய்ப்பு இருப்பவர்களாகக் கண்டறியப்பட்டு அவர்களும் வேறு இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
31 பேரும் ஈஎஸ்ஐசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், உயிரிழந்த முதியவரின் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேருக்கு கரோனா அறிகுறி தென்படுவதால் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் ஒருவர் கரோனா பாதித்து உயிரிழந்தது குறித்து கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலு கூறியது: கடந்த ஜனவரியில் சவுதி அரேபியாவுக்குச் சென்றிருந்த கர்நாடக மாநிலம், கலபுர்கியைச் சேர்ந்த முதியவர் பிப்.29-ஆம் தேதி கலபுர்கிக்கு வந்தார். அவருக்கு காய்ச்சல், நிமோனியா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், மேல்சிகிச்சைக்காக ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
இந்த நிலையில், அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தாரா எனக் கண்டறிய அவரது ரத்த மாதிரிகள் மருத்துவ ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன. தற்போது அறிக்கை கிடைத்துள்ளது. இதில் அவர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.