

கரோனா பாதித்த முதியவர் மரணம் அடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் கலபுர்கியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளையும் மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கலபுர்கியில் உள்ள அனைத்து கல்வி மையங்களையும் மூடுமாறு உத்தரவிட்டுள்ளோம். அதே சமயம் தேர்வுகள் இருந்தால் விடுமுறை விடாமல், முன்னெச்சரிக்கையோடு தேர்வுகளை நடத்தவும் அறிவுறுத்தியுள்ளதாக கலபுர்கி துணை ஆணையர் பி. ஷரத் கூறியுள்ளார்.
பெங்களூருவில் இருந்து 575 கி.மீ. தொலைவில் உள்ளது கலபுர்கி.
அது மட்டுமல்லாமல், கர்நாடகாவில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு மையங்களையும், திரையரங்குகள், பப்புகளையும் மூட உத்தரவிட்டிருக்கும் கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, ஒரு வாரத்துக்கு திருமண நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்றும், மக்கள் ஓரிடத்தில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பிகாரில் திரையரங்குகள், கல்வி மையங்களை மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிகாரில் அனைத்து திரையரங்குகளையும், பூங்காக்களையும் மார்ச் 31ம் தேதி வரை மூடவும், அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மற்றம் பயிற்சி மையங்களையும் மார்ச் 31ம் தேதி வரை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடப்படுவதால் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான மதிய உணவுக்கான தொகை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.