கரோனா பாதிப்பு சூழல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து, அண்டை நாடான வங்கதேசத்துக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து கிழக்கு ரயில்வே அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் கொல்கத்தாவில் இருந்து வங்கதேசத்தின் இதர நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டன.
இதன்படி, மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவிலிருந்து, வங்கதேச தலைநகா் டாக்காவுக்கு இயக்கப்படும் ‘மைத்ரீ’ விரைவு ரயிலும், அந்நாட்டின் குல்னா நகருக்கு இயக்கப்படும் ‘பந்தன்’ விரைவு ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. இந்த போக்குவரத்து ரத்தானது, ஏப்ரல் 15-ஆம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரையோ அமலில் இருக்கும்’ என்றாா்.