கரோனா அச்சுறுத்தல் காரணமாக மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் இந்தியா வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உருவான கரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் 140க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை ஏழு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 1.75 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இந்தியாவிலும் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 126ஆக அதிகரித்துள்ளது, தில்லி, கர்நாடகம், மும்பையில் தலா ஒருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, கரோனா பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் இந்தியா வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஐரோப்பிய யூனியன் நாடுகள் உள்ளிட்ட 30 நாடுகளில் இருந்து பயணிகள் இந்தியாவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் நுழையத் தடை விதித்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.