கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் ராஜஸ்தான் மாநிலம் முழுவதிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் நோய்த் தொற்று இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 151 (மத்திய சுகாதாரத் துறையின் மாலை 5.15 மணி நிலவரம்) ஆக உள்ளது. எனவே, மேற்கொண்டு பரவாமல் இருப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மார்ச் 31-ஆம் தேதி வரை அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை, மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட வேண்டும் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், கரோனா அச்சம் காரணமாக ராஜஸ்தான் மாநிலம் முழுவதிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ராஜஸ்தானில் 3 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
இதன்மூலம், ராஜஸ்தான் மாநிலத்தில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 4-இல் இருந்து 7 ஆக உயர்ந்துள்ளது. இதில், 3 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.