லேஹ் பகுதியில் முதல் முறையாக ராணுவ வீரருக்கு கரோனா பாதிப்பு

லேஹ் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த 34 வயது ராணுவ வீரருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
லேஹ் பகுதியில் முதல் முறையாக ராணுவ வீரருக்கு கரோனா பாதிப்பு


புது தில்லி: லேஹ் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த 34 வயது ராணுவ வீரருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ராணுவ வீரர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

லேஹ் பகுதியில் உள்ள சுஹோ கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் தந்தை, கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவ வீரரின் தந்தை உட்பட ஏராளமானோர் ஈரானில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் பிப்ரவரி 20ம் தேதி இந்தியா வரவழைக்கப்பட்டு, லடாக் இதய அறக்கட்டளையில் பிப்ரவரி 29ம் தேதி வரை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். 

இந்த நிலையில், ராணுவ வீரர் பிப்ரவரி 25ம் தேதி முதல் விடுமுறை எடுத்துவிட்டு மார்ச் 2ம் தேதிதான் பணியில் சேர்ந்துள்ளார். இதற்கிடையே அவர் மார்ச் 7ம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், 16ம் தேதி எடுத்த மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சோனம் நுர்பு மெமோரியல் மருத்துவமனையில் ராணுவ வீரர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். அதே மருத்துவமனையில், அவரது சகோதரி, மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ராணுவ வீரர் தனது தந்தை தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால், பணியில் சேர்ந்த பிறகும், வீட்டில் இருப்பவர்களுக்கு சில உதவிகளை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com