கரோனா பாதிப்பில் இந்தியா இன்னும் சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை என சுகாதாரத்துறை இணைச் செயலர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று இந்தியாவில் தீவிரமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 733 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லால் அகர்வால் நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது,
'கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனினும், இந்தியா இன்னும் சமூகப்பரவல் நிலையை எட்டவில்லை. ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரி பரிசோதனை அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமூகப் பரவல் இல்லை எனினும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். சமூகப் பரவல் நிலையை அடையாமல் இருக்க அரசின் வழிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியை சரியாக பின்பற்றி, கைகளை அடிக்கடி கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் சமூகப் பரவல் நிலை வராமல் தடுக்க முடியும்' என்று தெரிவித்தார்.
மேலும், கரோனா சிகிச்சைக்காக 17 மாநிலங்களில் பிரத்யேக மருத்துவமனை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.