கரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்க, உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 'ஆர்சனிக் ஆல்பம் 30' என்ற ஹோமியோபதி மருந்தை எடுத்துக்கொள்ள ஆயுஷ் மருத்துவத் துறையினர் பரிந்துரைக்கின்றனர்.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காததால் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்க ஹோமியோபதி மருந்தை எடுத்துக்கொள்ள ஆயுஷ் மருத்துவத் துறையினர் பரிந்துரைக்கின்றனர்.
கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள 'ஆர்சனிக் ஆல்பம் 30' (arsenic album 30C) என்ற மருந்தை எடுத்துக்கொள்ள மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, இருமல், தும்மல், தொண்டை வலி, வறட்டு இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், ஆர்சனிக் ஆல்பம் 30 (arsenic album 30C) என்ற மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். நாளொன்றுக்கு வெறும் வயிற்றில் காலை மட்டும் 3 மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். 3 நாள்களுக்கு எடுத்துக் கொண்டாலே போதுமானது. அடுத்தடுத்த வாரங்களில் வாரத்துக்கு ஒருநாள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம் என இந்திய ஹோமியோபதி மருத்துவக் குழுவின் (ஐஹெச்எம்எல்) திருச்சி கிளையின் செயலர் மருத்துவர் எஸ். விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், சளி, இருமல், நுரையீரல் பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு காணப்படும். கரோனா வைரஸுக்கு எதிர்த்துப் போரிட இந்த மருந்தானது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.
இந்த மருந்தை எடுத்துக்கொள்வதன் மூலம் நோய்க் கிருமி மனித உடலுக்குள்ளே வரும்போது எதிர்கொள்வதற்கு எதிர்சக்தி கிடைக்கிறது. மனிதனின் மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலைத் தூண்டி சுவாச உறுப்புகளின் செயல்திறனை அதிகரிக்கிறது. இதனால் உடலில் நோய்த் தடுப்பு மற்றும் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். இதன் மூலமாக வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகும்போது கூட அதன் பெருக்கத்தைத் தடை செய்து வெளியேற்றுவதனால் உடலை வைரஸ் தொற்றில் இருந்து காக்கிறது.
இந்த மருந்தினால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. மற்ற மருந்துகளைப் போன்று ஹோமியோபதி மருந்து ரத்தத்தில் கலப்பதில்லை. நரம்பு வழியாக செயல்படக் கூடியது.
மத்திய அரசு மட்டுமின்றி, கேரளம், குஜராத், ஆந்திரம், மணிப்பூர், புது தில்லி உள்பட பல்வேறு மாநில அரசுகளும் இதனை பரிந்துரை செய்துள்ளன. தமிழக அரசும் அண்மையில் அறிவித்துள்ள 'ஆரோக்கியம்' திட்டத்தில் இந்த மருந்தை பரிந்துரைத்துள்ளது.
எனவே, கரோனா தொற்று நம்மை தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 'ஆர்சனிக் ஆல்பம் 30' என இந்த ஹோமியோபதி மருந்தை எடுத்துக்கொள்ளலாம்.
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் டி. மாலினி, 'சளி, இருமல் போன்ற வைரஸ் அறிகுறிகள் இல்லாவிட்டாலும், மேற்குறிப்பிட்ட ஹோமியோபதி மருந்தை எடுத்துக்கொள்வதன் மூலமாக வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம். இதனால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.
சென்னை மடிப்பாக்கத்தில் இவரது ஸ்ரீ ஈஸ்வரன் ஹோமியோபதி கிளினிக்கில் இந்த ஹோமியோபதி மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், மாவட்ட வாரியாக பல்வேறு மருத்துவர்களும் 'ஆர்செனிக் ஆல்பம் 30' ஹோமியோபதி மருந்தை இலவசமாக வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.