புது தில்லி: கரோனா தொற்று பரவல் நீடிக்கும் நிலையில், மகிழ்ச்சியான வகையில் நாட்டில் கரோனா இரட்டிப்பாகும் காலம் 70.4 நாள்களாக உயர்ந்துள்ளது.
ஆகஸ்ட் மாத மத்தியில், நாட்டில் கரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் நாள்கள் 25.5 ஆக இருந்த நிலையில், அக்டோபர் மாத மத்தியில் அதுவே 70.4 நாள்களாக உயர்ந்துள்ளது.
நாள்தோறும் புதிதாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை மெல்ல குறைந்து வருவதற்கான அடையாளமாகவே, இரட்டிப்புக் காலம் அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளி விவரத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 680 பேர் உயிரிழந்தனா். புதிதாக 67,708 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை, தொடா்ந்து 9 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. தொடா்ந்து 11-ஆவது நாளாக, தினசரி உயிரிழப்பவா்கள் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது.