அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 17ஆம் தேதி வரை இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்களிலும் இரவுநேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக நொய்டா மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாவட்டம் முழுவதும் ஏப்ரல் 17ஆம் தேதி வரை இரவுநேரப் பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும் இந்தப் பொதுமுடக்கத்தில் இருந்து அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் 17 வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்விநிலையங்களில் நேரடி வகுப்புகளை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.