நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் அமைக்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் என இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்கள் தங்கள் பணியிடத்திலேயே ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமான போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி முகாம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி 45 வயதுக்கு மேற்பட்ட சுமார் 6,000 ஊழியர்கள் தடுப்பூசி பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 1,61,736 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 879 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கரோனா பரவலைக் குறைக்க ஏப்ரல் 11- 14 வரையில் நான்கு நாள்களுக்கு கரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.