உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில் உள்ள மருத்துவமனையில் கரோனா பாதித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வனத்துறை அதிகாரி, தனது நண்பர்களுக்கு கடைசியாக அனுப்பிய தகவலில் எச்சரிக்கையுடன் இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
உயிரியல் பூங்காவில் பணியாற்றி வந்த மண்டல வனத்துறை அதிகாரி யஷ்வந்த் சிங்குக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டு, லக்னௌவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் வியாழக்கிழமை மரணம் அடைந்ததாக மற்றொரு வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
உயிரிழக்க சரியாக மூன்று நாள்களுக்கு முன்பு, மரணத்தின் கோரப் பிடியில் சிக்கியிருந்த யஷ்வந்த் சிங் தனது நண்பர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் ஒரு தகவலை அனுப்பியுள்ளார்.
"சுமார் ஐம்பத்து ஐந்தரை ஆண்டுகள் பூமித் தாயின் மடியில் வாழ்ந்து வந்த நான், தற்போது எனது இறுதிப் பயணத்தைத் தொடங்கியுள்ளேன்.
யாரும் கரோனாவை நினைத்து கவனக்குறைவாக இருந்து விடாதீர்கள்.
எனது வாழ்த்துகள் உங்கள் அனைவருக்கும் இருக்கும்" என்று யஷ்வந்த் தெரிவித்துள்ளார்.
யஷ்வந்த் சிங்கின் உடல் லக்னௌவில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு மனைவி மற்றும் பொறியியல் பட்டதாரியான மகனும், எம்பிபிஎஸ் படிக்கும் மகளும் உள்ளனர். அவர் மரணமடைந்த நிலையில், அவர் அனுப்பிய அந்த கடைசித் தகவல் தற்போது அவரது நண்பர்கள் மூலம் பலருக்கும் பகிரப்பட்டு வருகிறது.