மேற்கு வங்கத்தில் தோல்வியை உணர்ந்ததால், கரோனாவுக்காகப் பிரசாரம் ரத்து என ராகுல் காந்தி சப்பைக் காரணம் கூறுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கிண்டலடித்துள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த ரவிசங்கர் பிரசாத் மேலும் பேசியது:
"கப்பல் மூழ்குவதைக் கேப்டன் உணர்ந்ததால் கரோனா 2-ம் அலை என சப்பைக் காரணம்.
கரோனாவை எதிர்கொள்ள மத்திய அரசு முழு வீச்சில் செயல்படுகிறது.
கரோனாவை எதிர்கொள்வது பற்றி திரிணமூல் காங்கிரஸும் நிறைய பேசுகிறது. பிரதமர் நரேந்திர மோடியுடனான அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றாரா என்றால் இல்லை.
தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்புக் கடமை. தேர்தல் ஆணைய வழிமுறைகள் அனைத்தையும் நாங்கள் பின்பற்றுவோம். பிகாரிலும் கரோனாவுக்கு மத்தியில்தான் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முறைகள் பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது.
கரோனா 2-ம் அலையில் மாநிலங்களுக்கான தேவையை வழங்குவதில் பாகுபாடு இல்லை."