மும்பை: மும்பை தானே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று நோயாளிகள் உடல் கருகி இறந்துள்ளனர்.
மும்பை தனோ அருகே மும்ப்ரா பகுதியில் உள்ள பிரைம் கிரிடிகேர் தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குறைந்தது மூன்று நோயாளிகள் உயிரிழந்ததாகவும், மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் யாரும் இல்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மூன்று தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். மேலும் ஐந்து ஆம்புலன்ஸ்கள் மூலம் சம்பவ இடத்தில் இருந்து நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றும் பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுவரை தீவிர சிகிச்சை பிரிவில் ஆறு பேர் உள்பட 20 நோயாளிகள் வெளியேற்றப்பட்டதாக அவர் கூறினார்.
தீ விபத்து குறித்து தொகுதி சட்டப்பேரைவ மற்றும் மகாராஷ்டிரம் அமைச்சர் ஜிதேந்திர அவாத் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவமனையின் முதல் தளத்தில் ஏற்பட்ட தீயில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த சோகம் குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் தீ விபத்தில் உயிரிழந்தவரின் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.
தீ விபத்துக்கான காரணம் அறிய தானே மாநகராட்சியின் அதிகாரிகள் மற்றும் காவல்துறை மற்றும் மருத்துவ அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
ஏப்ரல் 23 ஆம் தேதி பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.