ரத்து செய்யப்பட்ட தகவல் மற்றும் தொழில்நுட்பச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
கடந்த 2015ஆம் ஆண்டு, தகவல் மற்றும் தொழில்நுட்பச் சட்டம் பிரவு 66 ஏ ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், இச்சட்டத்தின் கீழ பலர் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுவந்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் இன்று (திங்கள்கிழமை) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் - ஜெனரலுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸூக்கு நான்கு வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தனி நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயருமா?
இதுகுறித்து நீதிபதி ஆர்.எப். நாரிமன் கூறுகையில், "இதுகுறித்து நீதித்துறை தனிப்பட்ட அளவில் விசாரணை மேற்கொள்ளும். இந்த விவகாரம் நீதித்துறை சார்ந்தது மட்டுமல்ல காவல்துறையும் சார்ந்தது. அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.
சமீபத்தில் நடைபெற்ற விசாரணையில், ரத்து செய்யப்பட்ட தகவல் மற்றும் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் 1,000 வழக்குகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கூடாது என்றும் அப்படி செய்திருந்தால் அதனை உடனடியாக திரும்பபெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.