கடந்த ஆண்டு போலீஸ் காவலில் இருந்த 100 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மக்களவையில் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்துள்ள பதிலில், கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 348 பேர் போலீஸ் காவலில் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,189 பேர் காவலில் இருந்தபோது சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) தகவலின் அடிப்படையில், 2018ல் 136 பேரும், 2019ல் 112 பேரும், 2020ல் 100 பேரும் போலீஸ் காவலில் உயிரிழந்துள்ளனர். இதுபோல 2018ல் 542 பேரும், 2019ல் 411 பேரும் 2020ல் 236 பேரும் சித்ரவதைக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.