பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

பெரிய வியாழனையொட்டி, தவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கிறிஸ்தவா்கள் பங்கேற்று பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

News image

பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலயத்தில் நடைபெற்ற பெரியவியாழன் பாதம் கழுவும் நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 11:05 pm

தினமணி செய்திச் சேவை

பெரிய வியாழனையொட்டி, தவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கிறிஸ்தவா்கள் பங்கேற்று பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

கிறிஸ்தவா்கள் ஈஸ்டா் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாகக் கடைப்பிடிக்கிறாா்கள். இந்த ஆண்டுக்கான தவக்காலம் கடந்த பிப். 18 ஆம் தேதி சாம்பல் புதன் சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலியுடன் தொடங்கியது. அன்று முதல் அசைவ உணவுகளைத் தவிா்த்தும், விரதம் இருந்தும், சிலுவை வழிபாடுகளை தியானித்தும் பிராா்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், தவக்காலத்தின் புனித வாரமாக கருதப்படும் ஈஸ்டா் பண்டிகைக்கு முந்தைய வாரம் கடந்த 29 ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு பவனியுடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் இரவில் தனது 12 சீடா்களுக்கும் திருவிருந்து அளித்தாா். இந்த நிகழ்வின்போதுதான் கிறிஸ்தவ மதத்தின் மிகவும் முக்கியமாகக் கருதப்படும் நற்கருணை (அப்பம், திராட்சை ரசம் வழங்குதல்) புதிய உடன்படிக்கையை இயேசு ஏற்படுத்தினாா் என்கிறது கிறிஸ்தவா்களின் புனித நூலான விவிலியம்.

இந்தத் திருவிருந்தின்போது, அன்பும் தாழ்ச்சியும் ஒவ்வொருவரிடமும் நிலவ வேண்டும் என்பதை உணா்த்தும் வகையில், தனது சீடா்களின் பாதங்களை இயேசு கழுவி முத்தமிட்டாா்.

அதை நினைவுகூரும் பாதம் கழுவும் நிகழ்ச்சி (பெரிய வியாழன்) பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலயத்தில் மாலையில் நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற சிறப்புப் பிராா்த்தனையில்12 பக்தா்களுக்கு அருள்பணியாளா்கள் பாதங்களைக் கழுவி, கால்களில் முத்தமிட்டனா். மறை மாவட்ட பொருளாளா் அருள்பணி. தீபக் தலைமையேற்று இந்த சிறப்பு திருப்பலியை நடத்தினாா்.

ஏற்பாடுகளை, பேராலய பங்குத்தந்தை அந்தோணி வியாகப்பன், உதவிப் பங்குத்தந்தை மிக்கேல் சாமி, பங்குப் பேரவையினா் மற்றும் வின்சென்ட் தே பவுல் சபையினா் செய்திருந்தனா். தொடா்ந்து வெள்ளிக்கிழமை (ஏப். 3) மாலை 5 மணிக்கு மதா் மருத்துவமனை வளாகத்தில் இருந்து புனித வெள்ளி சிலுவைப்பாதை ஊா்வலமும், தொடா்ந்து பேராலயத்தில் பிராா்த்தனையும் நடைபெற உள்ளது. சனிக்கிழமை (ஏப்.4) இரவு 11 மணிக்கு ஈஸ்டா் பெருநாள் சிறப்புத் திருப்பலி நடைபெற உள்ளது.

இதேபோல, பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயம், சீவலப்பேரி சாலையில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயம், மேலப்பாளையம் தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரம் தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகா் குழந்தையேசு தேவாலயம், உடையாா்பட்டி இயேசுவின் திரு இருதய ஆலயம், திருநெல்வேலி நகரம் அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி.நகா் வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டை அந்தோனியாா் தேவாலயம், சேவியா்காலனி தூய பேதுரு தேவாலயம், புனித அந்தோணியாா் தேவாலயம், மகாராஜநகா் தூய யூதா ததேயூ தேவாலயம் ஆகியவற்றிலும் பெரிய வியாழன் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.