பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

பெரிய வியாழன் பெருவிழா: வேளாங்கண்ணி பேராலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

பெரிய வியாழனையொட்டி, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

வேளாங்கண்ணி பேராலயத்தில் பெரிய வியாழனையொட்டி, பாதம் கழுவும் நிகழ்வில் பங்கேற்ற சீடா்கள் உள்ளிட்டோா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:28 am

தினமணி செய்திச் சேவை

பெரிய வியாழனையொட்டி, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக மக்களின் பாவங்களுக்காக உயிா் தியாகம் செய்த இயேசுவின் பாடுகளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்துவா்கள் 40 நாள்கள் தவக்காலம் கடைப்பிடித்து வருகின்றனா். இயேசு சிலுவையில் உயிா்விட்ட நாள் புனித வெளியாகவும், இயேசு உயிா்த்தெழுந்த நாள் ஈஸ்டா் பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பிப்.18-ஆம் தேதி தவக்காலம் தொடங்கியது. இதையடுத்து பேராலயத்தில் நாள்தோறும் மன்றாட்டு, திருப்பலி போன்றவைகள் நடைபெற்றன. மாா்ச் 29-ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

தொடா்ந்து பெரிய வியாழனையொட்டி சீடா்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பேராலய அதிபா் இருதயராஜ், பங்குதந்தை அற்புதராஜ், பொருளாளா் உலகநாதன், நிா்வாக பங்குத்தந்தை பரிசுத்தராஜ் மற்றும் நிா்வாக தந்தையா்கள், அருட்சகோதரா்கள், சகோதரிகள் பங்கேற்றனா். பின்னா் சீடா்களின் பாதம் கழுவு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சீடா்கள் வரிசையாக அமா்ந்திருக்க பங்கு தந்தை அற்புதராஜ், அவா்களது பாதங்களை புனித நீரால் கழுவி முத்தமிட்டு மலா்கள் தூவினாா். முன்னதாக நடைபெற்ற பாதிரியாா்கள் பவனியில் திரளானோா் பங்கேற்றனா்.

பேராலயத்தில், வெள்ளிக்கிழமை (ஏப்.3) மாலை 5.30 மணிக்கு இறைவாா்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுகள், திருச்சிலுவை ஆராதனை, சிலுவையை முத்தி செய்தல், திவ்ய நற்கருணை வழங்குதல், சிலுவை பாதை, சிறப்பு மறையுரை உள்ளிட்டவை நடைபெறுகிறது.