கரோனா இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக சில மாநிலங்களில் நோய்த் தொற்றின் பரவல் அதிகளவில் கண்டறியப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த லவ் அகர்வால் கூறியது:
உலகளவில் கரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. அதேபோல, இந்தியாவிலும் கரோனா இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை. நாட்டில் உள்ள 18 மாவட்டங்களில் 47.5 சதவீத பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. அதில், கேரளத்தை சேர்ந்த 10 மாவட்டங்கள் அடங்கும்.
மேலும், கடந்த ஜூன் 1-ல் 279 மாவட்டங்களில் 100க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவான நிலையில், தற்போது 57 மாவட்டங்களில் மட்டுமே பதிவாகின்றன. 222 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறைந்து வருகின்றது. கேரளம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 44 மாவட்டங்களில் கரோனா உறுதியாகும் விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளது.
சில மாநிலங்களுக்கு 3 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்திற்கு 4.88 கோடி, மகாராஷ்டிரத்திற்கு 4.5 கோடி மற்றும் குஜராத்திற்கு 3.4 கோடி தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.