எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 11 நாளாக அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | நாடாளுமன்ற முடக்கத்திற்கு தீர்வு காண வெங்கையா நாயுடு அறிவுறுத்தல்
இந்நிலையில் இன்று காலை கூடிய மாநிலங்கவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தொடங்கிய அவையில் எதிர்க்கட்சிகள் அமளிக்கு மத்தியில் திவால் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின், நாளை காலை 11 மணிவரை அவையை ஒத்திவைத்தனர். முன்னதாக இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, மக்களவையில் அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.