எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை கூடிய இரு அவைகளிலும் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர். இதனால், 15வது நாளாக மாநிலங்களவை 12 மணிவரையும் மக்களவை 11.30 மணிவரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்தார்.