தமிழக அரசு இன்று வெள்ளை அறிக்கை வெளியிடவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பேரூராட்சி பகுதியில் அதிமுக சார்பில், கரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு திங்களன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, பயனாளிகளுக்கு அரிசி, காய்கறிகள், கிருமிநாசினி, முகக் கவசம் உள்ளிட்டவை அடங்கிய கரோனா நிவாரண தொகுப்பினை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி கே. பழனிசாமியிடம், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை குறித்து, திமுக அரசு வெளியிட உள்ள வெள்ளை அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,
இதுகுறித்து தமக்கு எந்த ஒரு அச்சமும் இல்லை எனவும், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு இடையே, சிறப்பாக ஆட்சி நடத்தியதாகவும், அரசின் தேவைகளுக்காக மாநில அரசுகள் கடன் பெறுவது வாடிக்கையான ஒன்று எனவும், இது கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் ஒரு லட்சம் கோடிக்கு மேலான தொடர்ந்து சுமையை வைத்திருந்த திமுகவினருக்கு தெரியும் எனவும் கூறினார்.
இதையும் படிக்க | பாஜகவில் இணைகிறாரா ராஜேந்திர பாலாஜி? ஈபிஎஸ் பதில்
மேலும் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுகவினர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை பெரும்பகுதி நிறைவேற்ற தவறிவிட்டது எனவும், குறிப்பாக நீட் தேர்வு ரத்து, டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறைப்பு போன்ற பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறி விட்டதாகவும், இதனை மக்கள் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் அண்மையில் அதிமுகவினர் மாநில அளவிலான, பெரிய தொரு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை நடத்தி இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.