சாதி ரீதியான கணக்கெடுப்பு எடுக்காமல் மத்திய அரசு அமைதி காப்பது ஏன்? என காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்வி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
சாதி ரீதியான கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என பிகார், ஒடிசா மாநில முதலமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்த பின்னரும், அதை எடுக்காமல் மத்திய அரசு அமைதி காப்பது ஏன்? என காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்வி மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) கேள்வி எழுப்பியுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோரை அடையாளம் காணும் அதிகாரத்தை மீண்டும் மாநில அரசுக்கு வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் 127ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், 127ஆவது சட்ட திருத்தம் குறித்து மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்வி, "உண்மையான நிலவரம் குறித்து அறிந்து கொள்ள சாதி ரீதியான கணக்கெடுப்பு தேவை. ஏனெனில், கிட்டத்தட்ட 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அதிகப்பட்ச அளவை தாண்டியுள்ளது.
இதையும் படிக்க | தலைமை செயலாளரை தாக்கியதாக வழக்கு: அரவிந்த் கேஜரிவால் விடுவிப்பு
சாதி ரீதியான கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு என 17 சதவிகிதம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. இது முக்கியமான விவகாரம். சாதி ரீதியான கணக்கெடுப்பு எடுக்காமல் ஏன் ஓட வேண்டும்.
உங்களின் பிகார் முதலமைச்சரும் ஓடிசா முதலமைச்சரும் இந்த விவகாரத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளனர். உங்களின் சொந்த கட்சியை சேர்ந்த எம்பியே கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என தெரிவி்த்துள்ளார். நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?" என்றார்.