இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மூன்றாவது தடுப்பூசி செலுத்தி கொள்ள அனுமதி வழங்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இரண்டு தவணை கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்ட கேரளாவை சேர்ந்த கிரிகுமார் என்பவர், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொள்ள அனுமதி வழங்கும்படி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
செளதி அரேபியாவில் தான் பணிபரிந்துவருவதாகவும் விசா விதிகளின்படி அங்கு கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்றும் கிரிகுமார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் செளதி அரெபியாவுக்கு திரும்பி செல்ல வேண்டும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவுக்கு பதில் அளித்த மத்திய அரசு, "இரண்டு தடுப்பூசிக்கு மேல் செலுத்தி கொள்பவர்களுக்கு உடல்நலனில் பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஒருவர் இரண்டு தடுப்பூசிகளுக்கு மேல் செலுத்தி கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அதேபோல், மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு சர்வதேச வழிமுறைகள் வகுக்கப்படவில்லை. இதுகுறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்று கொள்ள முடியாது" என தெரிவித்தது.
கரோனா இரண்டாவது அலையின்போது, ஜனவரி மாதம் செளதி அரெபியாவிலிருந்து கிரிகுமார் இந்தியாவுக்கு திரும்பினார்.