ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு நவரத்னலு ஆலயம் என்ற கோயில் மற்றும் அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது.
நவரத்தின திட்டங்களைக் கொண்டு வந்ததற்காக, சித்தூர் அருகே ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்காக எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி ரூ.2 கோடி செலவில் இந்தக் கோயிலை கட்டியுள்ளார்.
இந்தக் கோயிலை ஆந்திர மாநில துணை முதல்வர் கே. நாராயணா சுவாமி தொடங்கி வைத்தார். ஜெகனண்ணா வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு திட்டம், இந்தக் கோயிலுக்கு பின்பகுதியில் அமைந்துள்ளது. அதுவும் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஜெகன்மோகன் ரெட்டியால் கொண்டு வரப்பட்டது நவரத்னலு திட்டம். அந்த திட்டம் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளதாக மதுசூதனன் கூறியுள்ளார்.
இந்தக் கோயிலை வடிவமைக்க தமிழகம் மற்றும் கர்நாடகத்திலிருந்தும் கட்டட நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டனர். இந்த கோயில் வளாகத்தில், கண்ணாடி மாளிகை, நவரத்னலு கோயில் மற்றும் மாநில அரசின் ஏழைகளுக்கான வீடு திட்டத்தின் மாதிரி வீடு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.