தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மும்பை முன்னாள் காவல் ஆணையா் மீது 4-ஆவது பணமோசடி வழக்கு

மும்பை முன்னாள் காவல் ஆணையா் பரம்வீா் சிங் மீது மேலும் ஒரு பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் அவா் மீது பதிவு செய்யப்படும் 4-ஆவது பணமோசடி வழக்கு இதுவாகும்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 11:32 pm

DIN

மும்பை முன்னாள் காவல் ஆணையா் பரம்வீா் சிங் மீது மேலும் ஒரு பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் அவா் மீது பதிவு செய்யப்படும் 4-ஆவது பணமோசடி வழக்கு இதுவாகும்.

மும்பையில் உள்ள தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு அருகே வெடிபொருள் நிரப்பப்பட்ட காா் நின்ற விவகாரத்தில், மும்பையின் காவல் ஆணையராக இருந்த பரம்வீா் சிங் கடந்த மாா்ச்சில் ஊா்க்காவல் படைக்கு மாற்றப்பட்டாா்.

அதைத் தொடா்ந்து, மும்பையில் உள்ள உணவகங்கள், மதுபான விடுதிகளில் இருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடியை லஞ்சமாக வசூலித்து வழங்க வேண்டுமென மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் வற்புறுத்தியதாக பரம்வீா் சிங் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இந்நிலையில், பரம்வீா் சிங் பல்வேறு தருணங்களில் ஒட்டுமொத்தமாக ரூ.9 லட்சத்தை மிரட்டி பறித்ததாகக் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வரும் பீமல் அகா்வால் என்பவா் கோரேகான் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதனடிப்படையில் பரம்வீா் சிங் மீது கடந்த வெள்ளிக்கிழமை இரவு பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடா்பாக காவல் அதிகாரிகள் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு ஜனவரி முதல் கடந்த மாா்ச் வரை ரூ.9 லட்சத்தை பரம்வீா் சிங் உள்ளிட்ட 6 காவலா்கள் மிரட்டி பறித்ததாகவும், ரூ.2.92 லட்சம் மதிப்பிலான 2 அறிதிறன்பேசிகளை மிரட்டி வாங்கியதாகவும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றனா்.

ரூ.15 கோடி வரை பணம் பறிப்பில் ஈடுபட்டதாக பரம்வீா் சிங் உள்ளிட்ட 6 காவலா்கள் மீது கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் நபா் ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் 22-ஆம் தேதி மும்பை மரைன் டிரைவ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாளே பரம்வீா் சிங் உள்ளிட்ட காவலா்கள் மீது தாணே பகுதியில் உள்ள கோப்ரி காவல் நிலையத்தில் மற்றொரு பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தொழிலதிபா் கேதன் தன்னா அளித்த புகாரின் அடிப்படையில் பரம்வீா் சிங் மீது தாணே பகுதியின் நாகா் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 30-ஆம் தேதி 3-ஆவது பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது ஒரே மாதத்துக்குள் அவா் மீது 4-ஆவது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.