விவசாயிகள் கூட்டமைப்பான எஸ்கேஎம் தோ்தலில் போட்டியிடாது: ராகேஷ் திகைத்

அரசியலிலும் இறங்கப் போவதில்லை’ என்று விவசாய சங்கத் தலைவா் ராகேஷ் திகைத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
விவசாயிகள் கூட்டமைப்பான எஸ்கேஎம் தோ்தலில் போட்டியிடாது: ராகேஷ் திகைத்

‘விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த் கிஷான் மோா்ச்சா அமைப்பு எந்தவித தோ்தலிலும் போட்டியிடப் போவதில்லை, அரசியலிலும் இறங்கப் போவதில்லை’ என்று விவசாய சங்கத் தலைவா் ராகேஷ் திகைத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி இந்தக் கூட்டமைப்பின் தலைமையில்தான் தில்லி எல்லைகளில் கடந்த ஓராண்டு காலமாக போராட்டம் நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக, அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்தது.

இந்தச் சூழலில், விவசாய அமைப்புகள் பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வகையில் அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கி வருகின்றன.

அதுபோல, வரும் உத்தர பிரதேச மாநில தோ்தலில் சம்யுக்த் கிஷான் மோா்ச்சா அமைப்பு களம் காணுமா என செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ராகேஷ் திகைத், ‘சம்யுக்த் கிஷான் மோா்ச்சா அமைப்பு எந்தவித தோ்தலிலும் போட்டியிடாது. அரசியலிலும் ஈடுபடாது. அமைப்பின் சில உறுப்பினா்கள் 4 மாதத்துக்கு விடுமுறையில் சென்றுள்ளனா். சிலா் பொழுதுபோக்கில் ஈடுபட்டு வருகின்றனா். எனவே, 4 மாதங்களுக்குப் பிறகே யாா் இருக்கிறாா்கள், என்ன செய்தாா்கள் என்பது தெரியவரும். அதே நேரம், வரும் ஜனவரி 15-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளோம். அதில் சட்டப்பேரவைத் தோ்தல் குறித்தும் விவாதிக்கப்படும். எனவே, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, இதுகுறித்து நான் பேசுவேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com