2021-22 பட்ஜெட் இந்தியாவின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை காலை தாக்கல் செய்து உரையாற்றினார் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இதையடுத்து மத்திய பட்ஜெட்டை பாராட்டிய பிரதமர் மோடி கூறியதாவது:
கரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் கடினமான சூழ்நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவின் தன்னம்பிக்கையை மேம்படுத்துவதாக உள்ளது. பட்ஜெட் குறித்த பார்வை கொண்ட ஒவ்வொருவரையும் தன்னம்பிக்கையை நோக்கி அழைத்துச் செல்கிறது.
வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றில் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனிநபர்கள், முதலீட்டாளர்கள், தொழில் மற்றும் உள்கட்டமைப்புத் துறைக்கு பல சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரும். பட்ஜெட்டை உருவாக்கிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டுகள்.
வரிச்சுமையை சாதாரண மக்கள் மீது வைப்போம் என்று பலர் நினைத்தார்கள். இருப்பினும் நாங்கள் ஒரு வெளிப்படையான பட்ஜெட்டில் கவனம் செலுத்தினோம்.
மேலும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் விதத்தில் பட்ஜெட்டில் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. விவசாயிகள் எளிதாக கடன்களைப் பெற முடியும். வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் உதவியுடன் ஏபிஎம்சி சந்தைகளை வலுப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுகாதாரம், பொருளாதாரம் ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக பட்ஜெட் உள்ளது.
நாட்டின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.