மும்பை: மரபணுக் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் 5 மாதக் குழந்தையின் உயிர் காக்கும் மருந்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய, சுங்க வரி ரத்து செய்யப்பட்டதற்கு ஃபட்ணவீஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்ணவீஸ், வைத்த கோரிக்கையை ஏற்று, சுமார் 6 கோடி மதிப்புள்ள சுங்க வரியை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்தது.
தீரா காமத் என்ற 5 மாதக் குழந்தை, மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டு, மரபணு மாற்று சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்டது. அதற்கான மருந்து வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய நிலையில், சுங்க வரி சில கோடிகளில் இருந்ததால் அதனை செலுத்த முடியாத நிலையில் பெற்றோர் தவித்து வந்தனர்.
இது குறித்து பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து, அந்த மருந்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. விலக்கு அளிக்கப்பட்ட வரித் தொகை சுமார் 6.5 கோடி ரூபாய் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே அந்த மருந்தின் விலையான ரூ.16 கோடியை, குழந்தையின் பெற்றோர் எப்படியோ திரட்டியிருந்த நிலையில், மத்திய அரசின் வரி விலக்கு பேருதவியாக அமைந்துள்ளது என்று ஃபட்ணவீஸ் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.