போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட சுமார் 2,444 சிறுமிகளை, 2021 ஜனவரி மாதத்தில் மீட்டுள்ளதாக அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
காணாமல் போன குழந்தைகளை மீட்கும் சிறப்பு அதிரடி திட்டத்தை மத்தியப் பிரதேச மாநில காவல்துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த ஜனவரியில் மட்டும் 2400 சிறுமிகள் மீட்கப்பட்டிருப்பதாகவும், ஜனவரி மாத இறுதியில் குழந்தைகள் காணாமல் போனது தொடர்பாக 3,122 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச காவல்துறையின் முஸ்கான் திட்டத்தின் கீழ் ஜனவரியில் 2,444 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில், இந்தூரைச் சேர்ந்த 175 சிறுமிகள், சாகரைச் சேர்ந்த 144 சிறுமிகளும் உள்ளடங்குவர்.
சிறப்பு அதிரடி திட்டத்தின் கீழ் 82 சதவீத காணாமல் போன வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. மீதமிருக்கும் வழக்குகளில், காணாமல் போன குழந்தைகள் இதர மாநிலங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை பஞ்சாப் மாநிலத்திலிருந்து 141 சிறுமிகளும் தெலங்கானாவில் 8 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
சில சிறுமிகள் குஜராத், கர்நாடகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போன குழந்தைகள் பற்றி புகார் வந்ததும், மூன்று நாள்களில் அந்த வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.