திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் இயங்கி வரும் கனரா வங்கிக் கிளையில் பணியாற்றி வந்த முன்னாள் கடற்படை வீரரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
2019-ஆம் ஆண்டு முதல் அந்த வங்கியில் கிளர்க்காகப் பணியாற்றி வந்த விஜீஷ் வர்கீஸ் (36) வங்கியில் முறைகேடுகளைச் செய்து பல கோடி ரூபாயுடன் தலைமறைவாகிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிப்ரவரி 14-ஆம் தேதி தங்களது வங்கியில் ஒரு ஊழியர் முறைகேட்டில் ஈடுபட்டதாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் அவனீஸ்வரத்தைச் சேர்ந்த விஜீஷ் வர்கீஸ் முறைகேடில் ஈடுபட்டது தெரிய வந்தது.
வங்கியில் நிரந்தர வைப்புக் கணக்குகளை, இவரே கடவுச் சொல்லைப் பயன்படுத்தி திறந்து, கணக்குகளை முடித்து, அந்தத் தொகையை தனது மனைவி மற்றும் உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வங்கியில் நிரந்தர வைப்பு வைத்திருந்த ஒரு பெண்மணி, தனது வங்கிக் கணக்கு முடித்து வைக்கப்பட்டதாக வந்த தகவலை வங்கியில் தெரிவித்தபோது இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
முறைகேடு வெளிச்சத்துக்கு வந்த போதே, வர்கீஸ் தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கிருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை. முதற்கட்ட விசாரணயில் அவர் சுமார் 7 கோடி ரூபாயுடன் தலைமறைவாகியிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
அவரது தாய் மற்றும் மாமனார் பத்தனம்திட்டாவில் வசித்து வந்தாலும், அவர்கள் வர்கீஸுடன் நெருங்கிய தொடர்பில் இல்லாததும், அவர்களுக்கும் வர்கீஸ் எங்கிருக்கிறார் என்பது தெரிய வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் தலைமறைவாகிவிட்ட வர்கீஸ், சிண்டிகேட் வங்கியில் பணியாற்றி வந்ததும், தற்போது வங்கிகளை ஒன்றிணைத்தபோது அவர் கனரா வங்கிக்கு மாற்றப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு விரைவில் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.