கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள 'கோவிஷீல்டு' தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதியளிக்குமாறு மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனம் கோரியிருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிடிஎஸ்சிஓ நிபுணா் குழு கூட்டத்தில், அந்த நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று 'கோவிஷீல்டு' தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதியளிக்குமாறு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்துக்கு (டிசிஜிஐ) பரிந்துரைக்கப்பட்டது.
இதேபோன்று பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) நிபுணா் குழு சனிக்கிழமை பரிந்துரைத்தது.
இந்த கோரிக்கைகளை ஏற்று தற்போது கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக பேசிய மருத்துவர் சோமானி, அவசர கால பயன்பாட்டிற்காக கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
பல்வேறுகட்ட சோதனைகளுக்கு பிறகு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு தடுப்பூசிகளையும் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிக்கலாம் என்று கூறினார்.