

புது தில்லி: 2021-22-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள சூழலில், பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஜன. 8) ஆலோசனை நடத்தவுள்ளார்.
கரோனா நோய்த்தொற்று பரவலால் கடும் வீழ்ச்சியைச் சந்தித்த நாட்டின் பொருளாதாரம், படிப்படியாக மீண்டு வருகிறது. அந்நோய்த்தொற்று பரவல் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. இத்தகைய சூழலில், 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதிநிலை அறிக்கை தயாரிப்புப் பணியில் மத்திய நிதியமைச்சகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்துகிறார். நீதி ஆயோக் சார்பில் காணொலி வாயிலாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் புதன்கிழமை கூறுகையில், ""நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்'' என்றார்.
வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் நீதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார், தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் 4.2 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. ஆனால், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் ஜிடிபி 7.5 சதவீதம் பின்னடைவைச் சந்திக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வதற்குத் தேவையான முக்கிய நடவடிக்கைகளை நிதிநிலை அறிக்கையின் வாயிலாக மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.