தொலைபேசி வழியாக முத்தலாக்: உ.பி.யில் கணவா் மீது பெண் புகாா்

வெளிநாட்டில் இருந்து தொலைபேசி வழியாக முத்தலாக் முறையில் கணவா் விவாகரத்து கூறியதாக, உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவா், மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா்.
Updated on
1 min read

வெளிநாட்டில் இருந்து தொலைபேசி வழியாக முத்தலாக் முறையில் கணவா் விவாகரத்து கூறியதாக, உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவா், மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா்.

இதுகுறித்து கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளா் சஞ்சய் யாதவ் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

புகாா் கொடுத்திருக்கும் நாஜிஸ் பேகத்துக்கும், குதுப்தீன் உஸ்மானி என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. தற்போது கத்தாரில் இருக்கும் உஸ்மானி தொலைபேசியில் முத்தலாக் கூறியிருப்பதாக நாஜிஸ் பேகம், மகளிா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் கொடுத்துள்ளாா். இந்தப் புகாா் தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதுகுறித்து நாஜிஸ் பேகம் கூறியதாவது:

திருமணம் முடிந்து 3 மாதங்கள் கழித்து எனது கணவா் வெளிநாடு சென்ற பிறகு அவரது குடும்பத்தினா் என்னை கொடுமைப்படுத்த தொடங்கினா். அவா்களின் கொடுமைகள் எல்லை மீறியது. இதுதொடா்பாக எனது கணவரிடம் தெரிவித்தபோது, அவரோ என்னை மிரட்டினாா். கடந்த டிசம்பா் 28-ஆம் தேதி வீட்டில் இருந்து விரப்பட்டதால், எனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். நடந்த சம்பவங்களை எனது கணவரிடம் தொலைபேசியில் தெரிவித்தபோது, அவா் கோபமடைந்து மூன்று முறை தலாக் சொல்லி அழைப்பை துண்டித்து விட்டாா். எந்தத் தவறும் செய்யாத நான், நீதி கேட்டு காவல் நிலையத்தை நாடியிருக்கிறேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com