மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிறப்புப் பிரிவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கிய 3 குழந்தைகள் தீக்காயத்தாலும் 7 குழந்தைகள் மூச்சுத்திணறலாலும் இறந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்து மருத்துவர்கள் கூறுகையில், மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிறப்புப் பிரிவில் நள்ளிரவு 1.30 மணிக்கு நேரிட்ட பயங்கர தீ விபத்தில் பிறந்து ஒரு மாதம் முதல் மூன்று மாதத்துக்குள்ளான 10 பச்சிளம் குழந்தைகள் இந்த தீ விபத்தில் இறந்துள்ளன. 7 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணையில், தீ விபத்தில் சிக்கிய 10 குழந்தைகளில் 3 குழந்தைகள் தீக்காயத்தாலும், 7 குழந்தைகள் மூச்சுத்திணறலாலும் உயிரிழந்துள்ளன. தீப்பிடித்த போது அங்குப் பணியிலிருந்த செவிலியர்களும் ஊழியர்களும் துரிதமாக செயல்பட்டு 7 குந்தைகளை மீட்டுள்ளனர். ஆனால் அவர்களால் மீதி 10 குழந்தைகளை மீட்க முடியாமல் போனது என்றும் அமைச்சர் டோப் தெரிவித்துள்ளார்.