மகாராஷ்டிர மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்திற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் பண்டாரா அரசு பொது மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் இருந்த பிரிவில் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவரும், பாஜகவை சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவீஸ்,
''மருத்துவமனை தீ விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். தீ விபத்திற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
மகாராஷ்டிரத்தில் உள்ள மற்ற மருத்துவமனைகளில் தீ விபத்து பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த வேண்டும். மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயாக இழப்பீட்டை உயர்த்தி வழங்கிட வேண்டும்'' என்று கூறினார்.