ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் தொடரும் பனிப்பொழிவால் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
கடும் பனிப்பொழிவைத் தொடர்ந்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் இயக்க முடியாததால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
"பனிப்பொழிவு மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது. பனிப்பொழிவால் வாகனங்கள் சாலையில் பயணிக்க முடியவில்லை” என உள்ளூர் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
பனியால் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகத் தங்குமிடங்களை சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் பனிப்பொழிவு மற்றும் மழையை கருத்தில் கொண்டு தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில நாட்களுக்கு விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.