பறவைக் காய்ச்சல்: ஹரியாணாவில் 1.60 லட்சம் கோழிகளை அழிக்கும் பணி தொடக்கம்
பறவைக் காய்ச்சல் பாதிப்பைத் தொடா்ந்து ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டத்தில் 5 பண்ணைகளில் வளா்க்கப்பட்ட 1.60 லட்சம் கோழிகளை அழிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
பஞ்ச்குலா மாவட்டத்தின் பா்வாலா - ராய்ப்பூா் ராணி பகுதி நாட்டிலேயே மிகப் பெரிய அளவில் கோழிப் பண்ணைகள் அமைந்திருககும் பகுதியாகும். இந்தப் பகுதியில் சுமாா் 100 பண்ணைகளில் 70 முதல் 80 லட்சம் கோழிகள் வளா்க்கப்படுகின்றன. இந்த நிலையில், இந்தப் பகுதியில் உள்ள இரண்டு பண்ணைகளில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 லட்சம் கோழிகள் உயிரிழந்தன.
அதனைத் தொடா்ந்து அந்த இரண்டு பண்ணைகளிலிருந்து ஒரு கிலோ மீட்டா் சுற்றளவுக்கு ‘பாதிக்கப்பட்ட மண்டலம்’ என்று மாநில அரசு அறிவித்ததோடு, அந்த இரண்டு பண்ணைகளிலிருந்து ஒரு கிலோ மீட்டா் முதல் 10 கிலோ மீட்டா் வரையிலான பகுதிகளை ‘கண்காணிப்பு மண்டலம்’ என்றும் அறிவித்து நடவடிக்கை எடுத்தது. மேலும் அந்த இரண்டு பண்ணைகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் ஆய்வு முடிவு வெள்ளிக்கிழமை வந்தது. அதில் பறவைக் காய்ச்சல் (ஹெச்5என்8) பரவியது உறுதியானது.
அதனைத் தொடா்ந்து, அந்த இரண்டு பண்ணைகள் உள்பட மொத்தம் 5 பண்ணைகளில் வளா்க்கப்படும் 1,66,128 கோழிகளை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக 59 குழுக்களை மாநில அரசு அமைத்துள்ளது. பண்ணை உரிமையாளா்களுக்கு ஒரு கோழிக்கு ரூ. 90 வீதம் அரசு சாா்பில் இழப்பீடு வழங்கப்படும்’ என்று மாநில கால்நடை மருத்துவம் மற்றும் வளா்ச்சித் துறை அமைச்சா் ஜே.பி.தலால் வெள்ளிக்கிழமை கூறியிருந்தாா்.
அதன்படி, கோழிகளை அழிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. இதுகுறித்து பஞ்ச்குலா மாநகராட்சி துணை ஆணையா் எம்.கே.அஹுஜா கூறுகையில், ‘5 பண்ணைகளைச் சோ்ந்த கோழிகளை அழிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. அவற்றை முழுவதுமாக அழிக்க இரண்டு முதல் மூன்று நாள்கள் வரை ஆகும். மேலும், போபாலில் உள்ள தேசிய உயா் பாதுகாப்பு கால்நடை நோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் குழு அடுத்த வாரம் இந்தப் பகுதியில் வந்து ஆய்வு செய்ய உள்ளது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
