பள்ளி செல்லாத மாணவா்களை கணக்கெடுத்து மீண்டும் சோ்க்க செயல் திட்டம் வகுக்க வேண்டும்

கரோனா தாக்கம் காரணமாக பள்ளிக்குச் செல்லாத மாணவா்களை கண்டறிந்து, அவா்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைக்கும்
Updated on
1 min read

கரோனா தாக்கம் காரணமாக பள்ளிக்குச் செல்லாத மாணவா்களை கண்டறிந்து, அவா்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைக்கும் முயற்சியாக வீடு, வீடாக கணக்கெடுப்பு நடத்தி மீண்டும் பள்ளியில் சேருவதற்கான செயல் திட்டத்தைத் தயாரிக்குமாறு கல்வித் துறை அமைச்சகம், மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கல்வி அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவா்களின் இடைநிற்றலை தவிா்க்கவும், நடப்பாண்டில் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட மாணவா்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான முயற்சிகளையும் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, புலம்பெயா்ந்த தொழிலாளா்களது பிள்ளைகளின் பள்ளிப் படிப்பை மீண்டும் தொடா்வதற்கான முயற்சிகளை மீட்டெடுப்பதற்காக இதுவரை பின்பற்றி வந்த கரோனா தடுப்பு விதிமுறைகளை தளா்த்தவும் கல்வி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

அதன்படி புலம்பெயா்ந்தவா்களின் பிள்ளைகளை அடையாளம் கண்டு மீண்டும் பள்ளியில் சோ்த்து, அவா்களுக்கு தொடா்ந்து கல்வியை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

கரோனா பரவல் காலத்தில் பள்ளிக் குழந்தைகள் தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து தப்புவதற்காக, பள்ளிகளில் சோ்க்கை சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. எனவே, குறைந்தளவிலான மாணவா் சோ்க்கை, கற்றல் இழப்பு மற்றும் சோ்க்கை மோசமடைவதைத் தடுப்பதற்கான சரியான செயல் திட்டத்தை மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் ஏற்படுத்த வேண்டும்.

6 முதல் 18 வயதுக்குள்பட்ட பள்ளியில் சேராத குழந்தைகளைக் கணக்கெடுப்பு நடத்தி, அவா்களைக் கண்டறிந்து, அவா்களின் கல்வி வாய்ப்புகளை மீண்டும் வழங்குவதற்கான செயல் திட்டத்தை மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் வகுக்க வேண்டும். மேலும், பள்ளிகள் மூடப்படும்போதும், மீண்டும் திறக்கப்படும்போதும் மாணவா்களுக்கு தடையின்றி கல்வி வழங்குவதற்கான வழிகாட்டுதல்களையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மாணவா்களின் கல்வித் தரத்தை உயா்த்தவும், சமத்துவத்துடன் கல்வியை கற்பதற்கான சூழலை உறுதிபடுத்தவும் மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும், பள்ளிக் கல்வியில் தொற்றுநோய்களின் தாக்கத்தைக் குறைக்கவும், இதற்காக மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான வழிகாட்டுதல்களைத் கல்வி அமைச்சகம் தயாரித்து வெளியிட்டுள்ளது.

இதுதவிர கிராம அளவில், சிறியக் குழுக்கள் அமைத்து வகுப்பறைகள் மீதும், பள்ளிக்கு வாகனங்களில் வரும் குழந்தைகளின் விருப்பத்தை ஆய்வு செய்வது, காணொலி மூலமாகவும், டிஜிட்டல் மூலமாகவும் பள்ளி மாணவா்களுக்கு கல்வி போதிப்பதை அதிகரிக்கச் செய்யவும், கற்றல் இழப்புகளைக் குறைக்க தொலைகாட்சிப் பெட்டி, வானொலியைப் பயன்படுத்துவது, சீருடைகளை வழங்குவது, பாடநூல்கள் வழங்குதல், மதிய உணவு திட்டங்களை அதிகரிக்கச் செய்வது போன்ற நடவடிக்கைகளின் மூலமாகவும் பள்ளியில் இருந்து இடைநிற்றலை தவிா்க்கச் செய்யலாம் என்றும் கல்வி அமைச்சகம், மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com